Sunday, September 2, 2012

சொன்னது நீ தானா ? - 1

நண்பர்களே,இதுவரை நான் தமிழில் காதல் கதைகள் எழுதியதில்லை.இது எனது முதல் முயற்சி. இது நிஜமல்ல வெறும் கதை.


                         Pic : courtesy link                                     

"I love you"

"ரமேஷ் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிட்டேன்,இது சரியா வராதுன்னு"

"காயு ப்ளீஸ்..நீ நல்லா யோசி,நம்ம பழகினது கண்டிப்பா  வெறும் friendshipப்பா இருக்க முடியாது..கொஞ்சம் யோ.." - என ரமேஷ் தொடங்க,அவன் பேசி முடிப்பதற்குள் காயத்ரி,

"ரமேஷ்,இத பத்தி நாம ஏற்கனவே பேசி இருக்கோம்.லுக் ரமேஷ், இன்னக்கி வரைக்கும் உங்களோட நான் அந்த எண்ணத்திலே ஒரு நாளும் பழகினதில்லை..Try to understand.. please, இனிமே இத பத்தி பேசி என்னை torture   பண்ணாதிங்க.."

 "நீங்க ஒரு பிரெண்டா எப்போ வேணும்னாலும் என்னை பார்க்க வரலாம்,என் கூட பேசலாம்..பட் இந்த மாதிரி எண்ணத்தோட இனிமே என்ன பார்க்க வராதிங்க..அப்படி வந்தா அதுவே நாம பார்க்கிற கடைசி தடவையா இருக்கும்"

சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் காயத்ரி. ரமேஷ்,கவலை தோய்ந்த முகத்துடன் அந்த நீண்ட மைதனாத்தையே சற்று நேரம் வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.

*****

கால்லிங் பெல் சப்தம் கேட்டு,ரமேஷின் அம்மா கதவை திறந்தார்.

"ஹலோ ஆன்ட்டி..எப்படி இருக்கீங்க,என்ன விஷயம் ஆன்டி,போன் பண்ணி கூப்பிடற அளவுக்கு என்ன ஆச்சு? ரமேஷ் இருக்கானா?"

"இல்லை பிரேம்..நீயே அவன் ரூமுக்கு போயி பாரு..எப்படி இருக்குன்னு"

ரமேஷின் அறை முழுவதும் புத்தகங்கள். கல்கி,Agatha Christie,Charles Darwin,Jeffrey Archer,Chetan Bhagat,தி.ஜானகிராமன் , சுஜாதா, பாலகுமாரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் சரமாரியாகக் கிடந்தன.அவனிடமிருந்த புத்தகங்களின் தொகுப்பைப் பார்த்த பிரேமுக்கேக் கூட படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

"இவ்வளவு புத்தகத்தையும் படிச்சிட்டானா?"

"அதை ஏன் பா கேக்கற..ரமேஷ் ரெண்டு வாரமா வீட்டிலே யார் கிட்டேயும் சரியா பேசறதில்ல..காலைல பதினொரு மணிக்கு கிளம்பி ஆபீஸ் போறான்,சாயங்காலம் 5.30 க்கு வந்துடறான்..கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வரைக்கும் ஏதோ ஒரு புத்தகத்த வாசிக்கிறான்..திரும்ப வந்ததும் நேரா இந்த ரூமுக்கு வர்றான்,மறுபடி கதவை சாத்திட்டு,படிக்க உக்காந்துட்றான்..சாப்பிடறப்போ மட்டும் தான் அவனை பார்க்கவே முடியுது"

"ஏன்?என்ன ஆச்சு?"

"கேட்டா,ஒண்ணுமில்ல,am alright..புத்தகங்கள் பழைய நண்பர்கள் போலன்னு சுஜாதா எழுதி இருக்கார்..அதை படிக்கிற சுகமே சுகம்னு வசனம் பேசிட்டு போயிடுறான்..என்னவோ நடந்திருக்கு.. ஏன் கிட்ட சொல்ல கூச்சப் படலாம்..நான் ஆயிரம் தான் அவன் கூட ஒரு சிநேகிதி மாதிரி பழகினாலும் கூட,அம்மா அம்மா தானே.. அதான் உன் கிட்ட கண்டிப்பா சொல்லி இருப்பான்,என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் வரச்சொன்னேன்."

"ஆன்ட்டி நானே அவன் கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு..சரி நீங்க கவலைய விடுங்க நான் பார்த்துகிறேன்.."

ரமேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக(Software Engineer) பணிபுரிகிறான்.சேர்ந்து ஓராண்டே ஆகிறது. காயத்ரி அவனுக்குக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஜூனியர்.

பிரேம், ரமேஷின் பால்ய சிநேகிதன்.ஒரே பள்ளியில் படித்தவர்கள்.இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே தேதியில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.கல்லூரி நாட்களிலேயே கூட ரமேஷுக்கு காயத்ரி மீதிருந்த காதல் பற்றி பிரேம் நன்கு அறிவான்.அப்போதே காயத்ரி ரமேஷின் காதலை ஏற்க மறுத்தது,என அனைத்தும் அறிந்தவன் தான் இந்த பிரேம் .

இவையெல்லாம் நடந்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது.ரமேஷைப் பற்றி பிரேமுக்குத் தெரியாத ஒரே விஷயம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரமேஷ் காயத்ரியிடம் மீண்டும் காதலைச் சொன்னது மட்டுமே.

"டேய் நீ என் கூட கொஞ்சம் வர்றியா..உன் கிட்ட பேச வேண்டி இருக்கு"

"எங்க?"

"நம்ம ஏரியா போலீஸ் பார்க் போலாம்"

"இல்லைடா ஒரு முக்கியமான defect fix பண்ண சொல்லியிருக்காங்க..இப்போ ஒரு status call வேற attend பண்ணனம்.."

"ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன் டா..இவரு ப்ரோஜெக்ட்லையே இல்லையாம்..இவரு status call,defect fix எல்லாம் பண்ண போறாராம்.."

"இது அப்படி இல்லை டா.." - ரமேஷ் பேச்சை பொருட்படுத்தாமல் பிரேம் கணினியை அணைத்தான்..ரமேஷ், மறுப்பு சொல்ல இயலாமல் வேறு வழி இன்றி பிரேமுடன் சென்றான்.

அந்த பூங்காவில் வெகு சிலரே இருந்தனர்.வழக்கம் போல அருகிலிருந்த கடையில் காபி வாங்கி குடித்துக் கொண்டிருக்கும்போது,


"சரி சொல்லு..என்ன பிரச்சினை.." - பிரேம் உரிமையுடன் கேட்டான்.

"யாருக்கு?"

"உனக்குத் தான் டா..என்ன டா,IT ல மார்க்கெட் சரி இல்லைன்னு சைடு பிசினஸ்ஸா புக் ஸ்டோர் ஏதாவது ஓபன் பண்ண போறியா?உன் ரூம் பூரா அவ்வளவு புஸ்தகம்.."

"ஓ வீட்டுக்கு போயிருந்தியா.அதெல்லாம் ஒண்ணுமில்லை டா பெஞ்ச் ல இருக்கனா,வெறுப்பா இருக்கு,அதான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிச்சிடலாம்னு முயற்சி பண்றேன்..மத்தபடி I am alright மச்சி..ஒன்னும் பிரச்சினை  இல்லைடா.."

ரமேஷ் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தான் பிரேம்.குடித்த காபிக்கு பணத்தை கொடுத்துவிட்டு, சர்வ சாதாரணமாக,ரமேஷைப் பார்த்துக் கேட்டான்,

"சரி சொல்லு என்ன பிரச்சினைன்னு"

"ஒன்னும் இல்லை டா" - தனது காதலை காயத்ரி மீண்டும் நிராகரித்த கதையை விலாவரியாகச் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டாலும்,பிரேமுக்கு இது சற்று அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்தது. ஏனெனில் கடந்த ஒரு வருடத்தில் ரமேஷ் ஒரு முறை கூட காயத்ரியைப் பற்றி தன்னிடம் பேசியதில்லை.

"அடப்பாவி!!!இதுக்காக மறுபடி காலேஜ் வரைக்கும் போனியா?என்ன டா இதெல்லாம்? நான் என்னவோ நீ அவளை மொத்தமா மறந்துட்டன்னு நினைச்சேன்,ஆனா நீ என்னடான்னா ஒரு தனி ட்ராக்ல போயிருக்க"

"எப்படி டா மறக்க முடியும்..ரெண்டு வருஷ லவ் ஆச்சே"

"ஆனா ஒன் சைடு லவ்(one side love) தானே மச்சி.."

"இருக்கலாம்..அவ என் கூட பழகினது வெறும் friendship தான்னு ஒதுக்கிட முடியாது பிரேம்" 

"டேய் நான் உன் கிட்ட பல தடவை சொல்லிட்டேன்..ஒரு பொண்ணு சிரிச்சிப் பேசறதை மட்டும் வச்சி அதை லவ்வுன்னு நினைக்கிறது முட்டாள்தனம்"

"ஹ்ம்ம்..வாஸ்தவம் தான்..ஆனா அவளுக்கு என் மேல நட்பையும் தாண்டி ஒரு உணர்வு இருக்குன்னு தான் தோணுது.."

"எதை வச்சி அப்படி சொல்ற நீ?"

ரமேஷ் சில விஷயங்களை விளக்கினான்..காயத்ரி தன்னுடன் பேசியவை, அவர்கள் இருவருக்குமிடையில் நடந்த சில விஷயங்கள் என அனைத்தையும் விவரித்தான். இதை கேட்டதும் இத்தனை நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்த பிரேம் சற்று குழப்பமடைந்தான்..பிறகு ஆத்திரமடைந்தான்..

"என்ன டா பொண்ணு அவ..இவ்வளவு தூரம் பழகிட்டு இது வெறும் பிரெண்ட்ஷிப்புன்னு சொல்றாளா? இந்த மாதிரி ஒரு கேவலமான பொண்ணு மிஸ் ஆனதே நல்லதுன்னு நினைச்சிக்கோ டா"

"டேய்..இன்னொரு முறை அவளை தப்பா பேசாத டா..ஆத்திரத்திலே ஏதாவது சொல்லிடுவேன்"

"இல்லை டா,இது உன்ன அலையை விட்டுட்டு பிஸ்கட் போட்ட மாதிரி இருக்கு..அதான்.." - என பிரேம் இழுத்தான்..  நிதானமாக பதிலளித்தான் ரமேஷ்,

"அவ வளர்ந்த சூழ்நிலைக்கு அவளுக்கு இதெல்லாம் சாதரணமாப் படலாம்..அவ நான் அவளுக்கு பொருத்தமானவன் இல்லைன்னு கூட நினைக்கலாம்..எனக்கு அவளை பிடிச்சிருக்கு,அதுக்காக அவளுக்கும் என்னை பிடிக்கனம்னு இல்லையே மச்சி..ஆனா ஒன்னு டா,She is a gem..இப்படி ஒரு நல்ல பொண்ணுக்கு என்னை பிடிக்கல.. அது ஒன்னு தான் என் வருத்தம்.."

"ஹ்ம்ம்.."

"அதான் கொஞ்சம் டிஸ்டர்ப்டா(disturbed) இருக்கு..இந்த கவலைய மறக்கனம்னு தான் ரெண்டு வாரமா புஸ்தகமா படிச்சி தள்றேன்.."

"நான் லவ் failure ஆனதால குடிக்கிறவன பார்த்திருக்கேன்..ஆனா படிக்கிறவன இன்னைக்கித் தான் பார்க்கிறேன்"

"என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்"  - என வானத்தை நோக்கிக் கூறிய ரமேஷ்,

"நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்திலே இருந்து கவனத்தை திசை திருப்பனம்னா, நமக்கு பிடிச்ச இன்னொரு விஷயத்திலே கவனத்தை செலுத்தனம்.. குடிக்கறதோ,இல்லை மேல இருந்து குதிக்கிறதோ இதுக்கு ஒரு தீர்வாகாது.."

"இந்த வசனமெல்லாம் நல்லா வக்கனையா பேசு..இங்க இவ்வளவு பேசத் தெரியுதுல்ல..வீட்டிலே ஏன் டா எப்போ பார்த்தாலும் மூஞ்ச தூக்கி வைச்சிருக்க"

"இல்லை டா,அவ ஞாபகமாவே இருக்கு..அதான் யாரோடையும் பேச பிடிக்கல"

"அதெல்லாம் அப்படித் தான் இருக்கும்..நீ அவளை உன் மனசில இருந்து தூக்கி எறி..அது தான் உனக்கு நல்லது"

"அது அவ்வளவு சுலபம் இல்லை மச்சி..உனக்கென்ன ஈசியா சொல்லிட்ட..என் இடத்திலே இருந்து யோசிச்சிப் பாரு அப்போ புரியும்"

"இதுக்காக கூடுவிட்டு கூடு பாயவா முடியும்?அவ தான் உன்ன வேண்டாம்னு ஒதுக்கிட்டால்ல, அப்புறமும் என்ன டா feelings ..அவளை மறந்துட்டு போவியா..அதை விட்டுட்டு.."

"உனக்கெல்லாம் இது எங்க புரிய போகுது..எந்த பொண்ண பார்த்தாலும் இஷ்டத்துக்கும் திட்றவன் தான நீ..bloody misogynist "

"உனக்கு அட்வைஸ் பண்ணன் பார்த்தியா எனக்கு வேணும்..ஆனா ஒன்னு சொல்றன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ மச்சி,எந்தப் பொண்ணும் ஒரு பையனோட உண்மையான பாசத்தைப் புரிஞ்சிக்கிறதே இல்லை"

ரமேஷ் முறைத்தான்..
 

"சரி உன் கிட்ட இன்னொரு விஷயம் கேட்கணம்னு நினைச்சேன்..ரூம்ல என்ன டா திங்க்ஸ்(things)  எல்லாம் பாக் பண்ணி வச்சிருக்க..எங்கயாவது டூர் போறியா என்ன?"

"பாக்கிங்(Packing) எல்லாம் முடிஞ்சுது..என்னோட books மட்டும் bagல வைக்கணம்"

"எங்க போறேன்னு கேட்டன்ல?"

"பெங்களூர்ல ஒரு short term project கிடைச்சிருக்கு..முதல்லையே கேட்டாங்க.. போக தேவை இல்லைன்னு தான் நினைச்சேன்.. ஆனா ஒரு சேஞ்சுக்கு பெங்களூர் போனா நல்லா இருக்கும்னு பட்டது.. அதான் காலையில தான் ஓகே சொன்னேன்.. இன்னும் அம்மா அப்பாக்குக் கூட சொல்லலை.."

"அடப்பாவி..பெங்களூர் போனா இந்த சம்பளம் பத்தாது டா..அம்மாக்கு தெரிஞ்சா கத்தப் போறாங்க பாரு.."

"பார்த்துக்கலாம் நம்ம அம்மா தானே..by the way,accommodation,allowance எல்லாம் தந்துடுவாங்க.. so செலவு பத்தி பிரச்சினை இல்லை.."

"எப்போ கிளம்பிறதா பிளான்?"

"சண்டே"

*****

மேஷ் பெங்களூருக்குச் செல்லும் செய்தியை காயத்ரியிடம் தெரிவிக்க விரும்பினான்.பிறகு மனதை மாற்றிக் கொண்டான்.காயத்ரியை மறப்பதென்பது இயலாத காரியம்.அவளிடம் பேசாமல் இருந்தாலாவது ஓரளவுக்கு மனமாற்றம் ஏற்படும் என நினைத்தான்.'நானாக அவளிடம் பேசினால் தான் உண்டு..அப்படியே ஊருக்குப் போறேன்னுச் சொன்னாலும் 'அப்படியா,ஓகே'னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவா..அவள் நிச்சயம் என்னிடம் பேசப்போவதும் இல்லை,என்னைப் பற்றி நினைக்கப் போவதும் இல்லை' - சற்று வருத்தப்பட்டான்.

பெங்களூரில் அலுவலகத்திற்குச் சென்ற உடன் தனது மேலாளர் கொடுத்தப் பணியை செய்ய ஆயத்தமானான். அங்கு தனக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண்ணின் இடத்திற்குச் சென்றான்.

"Hi..I am Ramesh.."

"Oh yeah..I am Pooja,was expecting you..Welcome"


ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.உயரமாக,சிவப்பாக மிக அழகாக இருந்த பூஜாவைக் கண்டதும் அவனுக்குக் காயத்ரியின் நினைப்புத் தான் வந்தது.அவனால் காயத்ரியை மறக்க முடியவில்லை.

அவன் பெங்களூரில் இருந்தாலும்,அவன் நினைப்பு முழுக்க காயத்ரியின் மீதே இருந்தது.ஒரு முழு நாள் அவளுடன் பேசாமல் இருப்பதே ரமேஷிற்கு மிகக் கடினம்.அவளும் அவனை தவிக்கவிட்டதில்லை.ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். மொபைல்,facebook,google talk,yahoo messenger என ஏதோ ஒன்றில் அவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்.ரமேஷ் தன் அலுவலகப் பணிகளுக்கிடையிலும் கூட காயத்ரியை மறந்ததில்லை.

ஆனால் காயத்ரியை பொறுத்த வரை நிலைமையே வேறு.காயத்ரியுடன் எப்போதும் பல பேர் அரட்டை அடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். ரமேஷும் அவர்களில் ஒருவன்.இது ரமேஷுக்குப் புரிய நீண்ட காலம் ஆயிற்று.கடந்த சில நாட்களாக ரமேஷ் அவளை தொடர்பு கொள்ளவில்லை.அவளும் ரமேஷைத் தொடர்பு கொள்ளவில்லை.

இப்போது சில நாட்களாக அவன் இணையத்தில் அரட்டை(chat) அடிக்கும் தளங்களுக்கும் செல்வதில்லை.இன்றோடு தனது செல்போன் எண்ணையும் மாற்றிவிட வேண்டுமென்று உத்தேசித்திருந்தான். ஒரு வேளை காயத்ரியிடமிருந்து ஒரு forward sms வந்தாலும் கூட அவளுக்கு தனது புதிய எண்ணைக் கொடுக்கலாம் என நினைத்தான். விரும்பிய நபரிடமிருந்து வரும் சாதாரண மெசேஜ் கூட நமக்கொரு தனி சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவளிடமிருந்து எந்த ஒரு அழைப்போ செய்தியோ வரவில்லை.ஏமாற்றமடைந்தான்.



இந்நிலையில் காயத்ரிக்கு கேம்பஸ் இன்டர்வியு மூலம் ரமேஷ் பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

-தொடரும்

No comments: